இந்த உலகில் மனிதனால் வெல்ல முடியாதது என ஒன்று இருக்கிறதென்றால், அது மரணமாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவில் நம்மால் மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போட முடியுமே தவிர வெல்ல முடியாது.
இப்படி வெல்லவே முடியாத மரணத்தையும் வெல்ல முடியும் என்கிறார் அகத்தியர். அவரது ”அகத்தியர் பூரணசூஸ்திரம் 216” என்னும் நூலில் இதற்கான விவரம் காணப் படுகிறது. இதன் நம்பகத்தன்மை மற்றும் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும், மேலதிக ஆய்வுக்கும் உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.
விளையுமடா கிழக்காகக் காதம் மூன்றில்
வெகுவிதமாம் பொன்னிமிளை விளையும் பூமி
தளையுமடா பொதிகைமலைச் சார்பு தன்னில்
தாம்பிரவே ணிக்கரையில் அருவி ஆற்றில்
முளையுமடா அதனடுத்த தெற்கே காத
மூவிலையால் குருத்துந்தான் மரமுண்டாகும்
தளையுமடா அதிநடுவே சோதி விருட்சம்
தன்னோடு வெண்சாரை தானும் உண்டே.
தன்னையே கண்டவுடன் ரம்பிதேதேதான்
சார்வான நடுமையம் பிடித்தாய் ஆனால்
பின்னையே பிடித்தவிடங்க் கையிருக்கப்
பேராக விருதுண்டாய்ப் பொருந்திப் போகும்
மின்னையே கையில் இருக்கும் அதனைத் தின்றால்
இருபதினா யிரவருடம் இருத்தும் பாரு
பொன்னையே தேடாதே கற்பந் தேடு
பொருள்காணப் புருவ மையம் நோக்கிப் பூணே.
பொதிகமலைச் சாரலில் பொன்னிமிளை விளையும் பிரதேசம் ஒன்று இருக்கிறதாம். அதை அண்டிய பகுதியில் தாம்பிரவேணி என்னும் ஆறு ஓடுகிறதாம். அதற்க்கு தெற்குப் பக்கமாக காத தூரம் சென்றால் மூவிலையை குருத்துக்களாகக் கொண்ட மரங்கள் இருக்குமாம். அவற்றின் நடுவே சோதிவிருட்சமும் இருக்கிறதாம். அதில் வெண் சாரைப் பாம்பு இருக்குமாம்.
இந்த பாம்பை கண்டவுடன் அதன் உடலில் நடு மையத்தை கையால் பிடிக்க வேண்டுமாம். அப்படி பிடித்தால் பிடிக்கிற பகுதி கையோடு வந்துவிடுமாம். இப்படி பிடிக்கும் போது வெண் சாரை கடிக்காதாம். உடனே பாம்பின் மற்ற இரண்டு பகுதிகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம். ஒட்டியவுடன் பாம்பு ஓடிவிடும் என்கிறார்..
இப்போது கையில் இருக்கும் வெண் சாரைப் பாம்பின் பகுதியை சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர். அப்படி சாப்பிட்டவர்களுக்கு இருபதாயிரம் வருடம் உடல் அழியாது இருக்குமாம். இந்த காலத்தில் பொன் பொருள் மீது மோகம் கொள்ளாமல் கற்ப வகைகளை தேடி அறிவதுடன், புருவ மத்தியை நோக்கி தியானித்திருக்க வேண்டும் என்கிறார்.
No comments:
Post a Comment